08 November, 2021

நீல அனிச்சம்


 


அன்புடையீர்
எனக்கு ஒரு
மன்றாடல் உண்டு.

பிள்ளைப் பேறு கண்ட
பச்சை உடம்புக் காரிக்கு
ஒரு போதும் புகட்டாதீர்
வெறுப்பில் தோய்த்த சொற்களை.

அதன்பின் அவள்
விழிகளில் அணிகிறாள்
நீலச் சாயை கொண்ட
கண்ணாடியை.

நீல உதிரம் போக்குகிறாள்
நீலப் பால் சுரக்கிறாள்.
நீல அனிச்சம் ஆகிறாள்.

நீலத் தழலின் மேல்
நீலநிற உணவு சமைத்து
நீலத் தட்டிலிட்டு உண்ணுகிறாள்.

வருடங்கள் கடந்த பின்பும்
வளைகாப்பில் தோழிக்கு
நீல வளையலிட்டு
நீலக் கன்னங்களில்
விரல்கள் நடுநடுங்க
நீல நலங்கு பூசுகிறாள்.

புரிந்து கொள்ளுங்கள்..
இளங்காலை வான் போல்
எளிதில் வெளுப்பதில்லை
அவளது
நீலச் சிற்றறையின்
நீல ஒளி. 

No comments:

Post a Comment