27 February, 2011

மன்னிப்பு


பருத்தியல்லாத ஒன்றைப்
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..

எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..

சற்றேனும் மென்மையற்ற
உயிர்த்தலும் உதிர்தலுமற்ற
இலையல்லாத இலைகளை
எந்நேரமும் முட்டியலையும்
உங்கள் செல்ல மீன்குஞ்சினைப் போலவே
மிக எளியவனவன்.

15 February, 2011

இன்மையின் திரிபுகள்















பலநூறு சர்ப்பங்கள்
பாலை கடந்ததுவாய்
விழித்திரையில் படரும்
உருவிலிக் காற்றின் பிம்பம்..

யுகங்களாய் மௌனத்துழலும்
நிலவை மொழிபெயர்த்து
கொதிக்கும் வெள்ளியெனக்
குமுறித் தீர்க்கும்
பௌர்ணமிக் கடல்..

நிழலென வீழ்ந்து
நீரின் விரல்பிடித்து
நெடுந்தூரம் சுழன்றோடும்
அசைதல் அறியாத
ஆற்றங்கரை மரத்தண்டு..

பிறப்பின் முதற்கேவலாய்ப்
பெருங்குரலில் குழையும்
நீர் மண்டிய கருப்பைக்குள்
நெகிழ்ந்திசைத்தல் கூடாத
சிசுவின் நுரையீரல்..

பொழியாதும் கலையாதும்
புரண்டலைந்து திரியும்
புயற்காலத்து முகிலுடைகையில்
விழியுடைத்து வழியும்
வெளிப்படுதல் வாய்க்காத
பெருநேசம்..

உருவமும் மொழியும்
அசைவும் குரலும்
வெளிப்படுதலும் வேறெதுவும்
இல்லாத கொடும் வெறுமை
அணுவணுவாய் யாதுமாகும்
கவியொன்றில்.

06 February, 2011

பேரொளிப் பெண்டுலம்

*
சன்னலின் மேல்விளிம்பில்
விழி பொருத்தி
கீழும் மேலும்
மேலும் கீழுமாய்த்
தலையசைக்கிறேன்..
வீட்டிற்குள் வந்து வந்து போகிறது
சற்றுமுன் உதித்திருக்கும் நிலா.

**
மீண்டும் மீண்டும்
ஒருவிழி மூடி மற்றதைத் திறந்தும்
முன்னதைத் திறக்கையில்
மற்றதை அடைத்தும்
வான்பார்த்துக் கிடக்கிறேன்..
ஒன்றுமிலாப் பெருவெளியின்
உருவிலிக் கயிறு பிடித்து
பேரொளிப் பெண்டுலமாய்
எனக்கென ஆடுகிறது
நிலா.
*