12 June, 2009

காணாமல் போனவை-4

கரும்புள்ளிகள் பற்றிய
கவலை யேதுமற்று
அடர்மஞ்சள் சிறகசைத்து
அடிக்கடி வருவதுபோல்
அன்றும் வந்தது அது..

திறந்திருந்தது தமக்கையின்
தாவரவியலேடு
பசையுலர்த்தும் பொருட்டு..

பருத்த புத்தகங்களில்
பதப்படுத்தப்பட்டு
பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
சங்குப்பூவிதழோரம்
அமர்ந்திருந்து
கிளம்ப எத்தனிக்கையில்
சில நொடிகள் படபடத்தது
இயல்புக்கு மாறாய்...

சிலநாட்களுக்குச்
சீனிக் கரைசல்..
தொடர்ந்த நாட்களில்
தேன் கிண்ணம் ..
சற்றே வளர்ந்ததும்
பூச்செடிகள் ...
எத்தனை செய்தும்
இன்றுவரை வரவில்லை மீண்டும்..

தேர்வுக்குப் பின்பான
ஆணிதுளைத்த பதிவேட்டில்
ஒட்டியிருக்கின்றன இன்னும்
கொஞ்சமாய் சிறகின் மஞ்சளும்..
ஒடிந்து போன அதன் காலும்..

காணாமல் போனவை- 3

பள்ளி விடுதிக்கு
அடிக்கடி வந்தன
ஒரே உறையிலிடப்பட்ட
சில கடிதங்கள்
எவரது எதுவென்றெல்லாம்
கேள்வி யெழுப்பாமல்..

தாத்தாவின் காகிதத்தில்
நாயின் கால்
வலப்புறம் தனித்தும்
புறாவினது இடப்புறம்
சுழன்று மிருக்கும்.

நுணுக்கி எழுதும்
அம்மாவின் கடிதம்
அவ்வப்போது ஏந்திவரும்
எண்ணெய் அல்லது
மஞ்சள் கறையை..

அப்பா எழுதுவது
அலுவலகத்து மையில்
அவசரமாய்...

ஓரங்களில் கோடிட்டு
ஒழுங்காய் எழுதுவது
தங்கை..

அனைவரின் தகவலையும்
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக்
கூர்ந்து நோக்குகையில்
தெரிகின்றன
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem15062009.asp

காணாமல் போனவை -2


தேடும் அவகாசமற்று
அலுவலக அவசரங்களில்
தொலைத்திருந்த
உவமைகளுள் ஒன்றை,
சமையல்காரர் விடுப்பெடுத்த நாளில்
கண்டுகொண்டேன் மீண்டும்..
குட்டிப்பிறைகள்
குழம்பில் மிதந்தன
தோலுரிக்கப்பட்டு
.

10 June, 2009

பொம்மை



பயணத்துடனேயே தொடங்கின
எதிரிருக்கைச் சிறுமியின் கேள்விகள்..
பின்னோக்கியோடும் மரங்கள்..
வெகுநேரமாய் உடன்வரும் மேகம்..
அபாயச் சங்கிலியின் அவசியம்..
அடுத்த இருக்கைத் தாத்தாவின்
ஆங்கில நாளிதழென
எதையும் மறவாமல்
வினாக்கள் எழுப்பினாள்..

சிறிதுநேரம் பேசிவிட்டு
அமர்ந்தபடி தூங்கிப்போன
அம்மாவின் முகத்தை
அதிசயமாய் நோக்கிப்பின்
எதுவும் பேசாமல்
இறுக அணைத்துக் கொண்டாள்,
கிடத்துகையில் மூடி
நிமிர்த்துகையில் திறக்கும்
நீலவிழி கொண்ட பொம்மையை.

நிறுத்தமொன்றின் இணைப்பாதையில்
இளைப்பாறிய வண்டியின் சன்னலில்
இவளைக் கண்டதும் கையசைத்தாள்
இதே போன்ற பொம்மையுடன்
இன்னுமொரு சிறுமி.

இடிபாடுகளில்..


*
தலைமுறைகள் கண்ட
தெருமுனை வீட்டை
இடிக்கத் தொடங்கியிருந்தார்கள்..

***
நெடுநாட்களாய் மண் கொணர்ந்து
சன்னலின் மூலையில்
கூடு செய்த குளவிக்கு
எவரும் அறிவிக்கவில்லை
அதன்வீடும் தகர்க்கப்படுவதை..
வழிதவறியதாய் வருந்தி
அடுத்தடுத்த வீடுகளில்
அலைந்தபடி இருக்கிறது
குளவி.

***
கோடையில் ஒருநாள் தனக்குக்
குடைபிடித்த குழந்தையுடன்
இன்னொரு சிநேகப் பொழுதை
எதிர்நோக்கி இருக்கிறது
வாசலருகில் வேப்பங்கன்று..

***
தலைமுறைகள் மாறுகையில்
தனை இரசிக்க எவருமற்று
தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
இறுதிவரை சொல்லவில்லை
நிலவு தன் நிலையை..

***
நிறைய மகிழ்ச்சியுடன்
நிறங்கள் தெரிவு செய்து
சுவரில் தான் வரைந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
சிறகொடிகையில்
வலித்திருக்குமென
புலம்பித் திரிகிறாள்
சிறுமியொருத்தி..

***
எதிர்வீட்டுக் கொடியில்
சிறுமியின் பாவாடையில்
சிவப்பாய்க் காய்கின்றன
இழைத்து நெய்யப்பட்ட
பட்டுப்புழுக் கூடுகள்.
*








......


தனிமை கலைத்ததற்காய்
கடிந்து கொள்ளும் காதலர்கள்...
அழுக்கேறிய ஆடைகண்டு
முகம்சுழித்து விலகும்
அழகிய குழந்தைகளின் அம்மாக்கள்..
சிப்பிகள் பொறுக்குவதைச்
சிலநொடிகள் நிறுத்திவிட்டு
சிநேகமாய்ச் சிரிக்கும் சிறுமி...
கடல் வெறித்தபடி
தனிமையில் அழும்
தாடிவைத்த இளைஞன்...
பட்டம் விட்டு விளையாடும்
ஒத்த வயதுச் சிறுவர்கள்...
முகத்தில் சலனமற்று
அனைவரையும் கடக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்...
என் கவிதைகளுக்குத்தான்
பக்குவம் போதவில்லை
இன்னும்.

02 June, 2009

கனவின் அல்லிப் பதியன்கள்



துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.