Showing posts with label யாவரும். Show all posts
Showing posts with label யாவரும். Show all posts

15 August, 2021

ஆதிச்சுடர்

 


இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்

செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை.

20 January, 2021

ஆழியின் மகரந்தம்

                                                         

 

பூக்களை மட்டுமே 

புகைப்படம் பிடிப்பவன் 

கடல் பார்த்துத் திரும்புகிறான் 

ஒற்றை அலையின் படத்துடன். 


மலர்ந்த நாகலிங்கத்தின் 

மகரந்த முக்காடு போல் 

ஒயிலாய் வளையும் ஒற்றை அலை.


கடலினுள் இறங்கும் கதிரவனின் 

செம்மஞ்சள் பூசிச் சிதறும் 

மகரந்தத் துகள்களென 

நீர்த்துளிகள். 


ஆழியை மடித்து மடித்து 

அல்லிவட்ட  இதழ்கள் செய்யும் 

ஓரிகாமி அறிந்த 

சிறுமி இக்கவிதை. 


நன்றி: யாவரும்.காம் 


28 July, 2020

இணை கோடுகள்


அரைநொடி மின்னலுக்கு இணையென
நகராது நகர்ந்தெழுதும்
நத்தை தனது மினுங்கும் கோட்டை.

நேர்க்கோட்டில் நீந்தும்
திமிங்கிலத்தின் பெருமூச்சை
வெகுநீட்டி விரையும்
விமானத்தின் வெண்புகை.

ஈறறியாப் பேரண்டத்தில்
எவர் வகுக்கக் கூடும்
இலக்கங்கள்...
இலக்கணங்கள்..
இணைகோட்டுச் சூத்திரங்கள்?

எல்லாம் கிடக்கட்டும்..
இல்லாதிருக்கும்
இருப்புப் பாதையில் பார்..
சின்னஞ்சிறு மஞ்சள் பொதிகளில்
கவிதைகள் சுமந்து வரும்
இரயில் பூச்சி.


நன்றி: யாவரும் 

19 September, 2019

வேனிலின் சுடர்கள்





கங்குச்சட்டியில் வாடும்
கதிர் சோளக் கூம்பினின்று
கடற்கரை வெளியேகும்
தகிக்கும் தங்கச் சுடர்கள்.

கொன்றை மஞ்சரிக் கூம்பு நீங்கி
கொதிகானலில் நெளிந்தாடித்
தரைநோக்கிப் பயணிக்கும்
தணிந்த தங்கச் சுடர்கள்.

இரவோடும் பகலோடும்
கடலோடும் கானலினூடும்
தகித்திருக்கையில் தணிந்ததையும்
தணிந்திருக்கையில் தகிப்பதையும்
சடசடப்பதையும் சப்தமற்றதையும்
ஒன்றே போலத் தழுவித் திரிகிறான்
காற்றெனும் மாய முதுகிழவன்.



நன்றி: யாவரும்