08 December, 2021

********


 



உங்களோடு என்னால்
உடன்பட முடியாது.
நீங்கள் நினைப்பது போல்
வசீகரமற்றதல்ல
ஆமை.
அதற்குச் சிறகுகள்
உண்டு.
நான் பார்த்தேன்.
அப்போது
அது அதன் போக்கில்
நீரின் அடியில் இருந்தது.

......

 



நெளியும் பிம்பங்களை
நீந்திக் கடந்து
நிச்சலனப் பாறையை
அடைந்தது ஆமை.
பிறகு
பாறையும் ஆமையும்
கிடந்தன
குளிரோடு குளிராய்
ஈரத்தோடு ஈரமாய்
இருளோடு இருளாய்.
இமைமூடிப் பார்த்திருந்தான்
கரையோரப் புத்தன்.

மீண்டும்-2

 



கூழாங்கல் மேல்
ஓவியம் வரைந்து
கூடத்துக் காட்சிப்பெட்டியில்
வைக்கலாம் என்றேன்.
வெயில் நெளியும்
வேனில் நாளில்
குளத்தினுள்
எறிந்துவிடலாம் என்றாள்
குட்டிம்மா.

மீண்டும்


 


நீரின் மேல் படரும்
ஒளியின் ஆயிரம்
அடவுகள்.
அசையாது அசையும்
அடியில் தங்கிய
கரும்பாறை.
சறுக்கி நகரும்
பாலே கலைஞனென
குளத்துக்குள் நழுவும்
கரையில் ஓடுலர்த்திய
ஆமை.

.........


 உங்கள் வீட்டு

உத்திரத்திலேயே இருக்கட்டும்
தொண்ணூறு கண்ணாடிப்
பந்துகள் கொண்ட
தொங்கும் விளக்கு.
என்னிடம் இருக்கிறது
குபுகுபுவென
குமிழிகள் குதித்தெழும்
வளையமும்
சோப்பு நீர்க் குப்பியும்.
வெளியில் வந்து
பார்த்தால் புரியும்..
சிதறும் ஒளியை விடப்
பேரழகாய் இருக்கிறது
பறக்கும் ஒளி.

இருளும் ஒளியும்

 

ஒளி மயமானது

பிரபஞ்சம்.

விரியும்
சுழலும்
மிதக்கும்
பறக்கும்..
இருள் மயமானதும்
பிரபஞ்சம்
இருந்தபடியே
இருக்கும்.
பிரபஞ்சம் என்பது
பெண்ணின் மனம்.
சினைப்பைகளில்
இருக்கிறது
அதை இயக்கும்
மந்திரக்கோல்

மகிழ்ச்சி

 வளைய‌ முடியாதவற்றை

வளைக்க முனைவதில்
இல்லை எங்கள்
மகிழ்ச்சி.
குமிழியின் மேல்
குழல் விளக்கொன்று
படிந்து வளைவதைப்
படம் பிடிப்பதில்
இருக்கிறது.