22 January, 2011

உடையும் பறவைகள்

நுரையீரல்களில் நூறாயிரமும்
முகத்தில் ஒன்றுமெனப்
பூக்கள் குவித்தவற்றை
விடுவிக்கிறாள் சிறுமி...
குப்பிச் சிறை விடுத்துக்
குறுவளையம் கடந்து
காற்றேகி உடைகின்றன
உருண்ட பறவைகள்.

அறையோரக் குவளையுள்
ஓயாமல் மௌனம் உமிழும்
ஒற்றைமீனின் இதழ் நீங்கி
நிச்சலன நீர்ப்பரப்பை
மிக மெலிதாய் அசைத்துடைகின்றன
சற்றே சிறிய உருண்ட பறவைகள்.

மீனிருக்கும் அறை நுழைந்து
பாழ்மௌனப் பட்சிகள்
உடைந்துலவும் காற்றில்
பேருவகைப் பறவைகளைப்
பறக்கப் பணிக்கிறாள் சிறுமி.

அவளுடன் அறை எய்தும் கவிதையொன்றில்
மீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.

பொதுமைய வட்டங்கள்

மெதுமெதுவாய்
மிக உன்னிப்பாய்
ஒன்றினுள் மற்றொன்றாய்
உடைந்த வட்டங்களுக்குள்
சின்னஞ்சிறு பந்துகளைச்
செலுத்தி விளையாடும்
அற்புதத் தருணங்களில்
எவர் அழைத்தாலும்
எளிதில் கலைவதில்லை அவள்.....

திடுமெனத் தெருநோக்கி
விரைபவளைத் தொடர்கிறேன்..
சில ஆயிரம் பந்துகளைத்
தேங்கிய நீரிலெறிந்து
அதிவிரைவாய்
மிக எளிதாய்
ஒன்றைச் சுற்றி மற்றொன்றாய்
சில லட்சம் வட்டங்கள் வரைந்து
இம்முறை அவளை
அழைத்திருப்பது மழை.

21 January, 2011

ரயில் குறிப்புகள்

தூரத்து மலையில்
காற்றுடன் நெளிகிறது
செந்நிற ரயிலென
காட்டுத்தீ..
மருண்டு வெளியேறும்
மலைமுகட்டுப் பறவையின் விழியில்
வளி கிழித்து விரையக்கூடும்
நீலத்தீயென ரயில்.

***
ஆதிச் சிவப்பு குன்ற
மெதுமெதுவாய் வெண்மை கூட
ஊர்ந்து வளர்கிறது
ரயிலின் வெளியில் பகல்
எதிரிருக்கைச் சிறுமியின்
மருதோன்றி நகம் போல.

***
தயக்கம் ததும்பும் நடை
கழுத்து மினுங்கத் தலையசைப்பு
மிரண்டுருளும் விழிப்பந்து
மென்செருமல் இல்லையெனில் மௌனம் மட்டும்
பேரொலிக்குப் படபடப்பு....
பெருநகரத்து இளைஞனின்
கிராமத்து மனைவியென
நடைமேடையில் திரிகிறது
ரயில் நிலையத்துப் புறாவொன்று.

***
கடைசிப் பெட்டியில்
ரயில் விரையும் திசைநோக்கி இருத்தல்
ரம்மியம்..
வழியின் வரைபடமென
வளைந்துருளும்
முந்தைய பெட்டிகள்..
தடம் மாற்றம் முன்னொலிபரப்பும்
தாளம் பிறழா சக்கரங்கள்..
இருள் மண்டிய குகையெதிலும்
முதல் ஆளாய் நுழைய
ஒருபோதும் நேர்வதில்லை..
பாதை குறித்த,
பாதையறிதல் விளைவித்த,
இறுதியில் இருத்தல் அல்லது
இறுதியாய் இருத்தல் பற்றிய
இம்சிக்கும் பயங்களில்லை.
வாழ்க்கை ரயில் போலில்லை.

***
பயணங்கள் யாவிலும்
சன்னல்கள் கடந்து
பறவைகளாகின்றன விழிகள்..
இமைச் சிறகசைத்தபடி
மலை, மரம், மழை,
வான், முகில், மதி,
கடல், வயல், வனம்,
செந்தீ பிரவகிக்கும்
விடியலின் நதியென
யாவற்றினூடும் விரைகின்றன
ஒவ்வொரு ரயிலுடனும்
சிலநூறு இணைப்பறவைகள்.