Showing posts with label காணாமல் போனவை. Show all posts
Showing posts with label காணாமல் போனவை. Show all posts

12 January, 2010

சிறகின் மேல் பறத்தல்


பரணில் கூடமைக்கும்
பறவையின் சிறகு தொற்றி
படுக்கையறை நுழையும்
பள்ளிக்கூட மதிலோரத்து
இலவின் நினைவு போல்..

கண்ணாடிச் சன்னல் வழி
கடினமின்றி நுழைகிறான்
வண்ணத்துப்பூச்சி துரத்துகையில்
நட்பாகி
வளர்ந்தபின் கடலாடி மரித்தவன்..

அளவிலிச் சிறகசைத்து
அலையும் வண்ணத்துப்பூச்சியென
விரிந்தபடி யிருக்கிறது
விமானத்தின் கீழ் கடல்.


உரையாடல் கவிதைப் போட்டிக்கு.

12 June, 2009

காணாமல் போனவை-4

கரும்புள்ளிகள் பற்றிய
கவலை யேதுமற்று
அடர்மஞ்சள் சிறகசைத்து
அடிக்கடி வருவதுபோல்
அன்றும் வந்தது அது..

திறந்திருந்தது தமக்கையின்
தாவரவியலேடு
பசையுலர்த்தும் பொருட்டு..

பருத்த புத்தகங்களில்
பதப்படுத்தப்பட்டு
பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
சங்குப்பூவிதழோரம்
அமர்ந்திருந்து
கிளம்ப எத்தனிக்கையில்
சில நொடிகள் படபடத்தது
இயல்புக்கு மாறாய்...

சிலநாட்களுக்குச்
சீனிக் கரைசல்..
தொடர்ந்த நாட்களில்
தேன் கிண்ணம் ..
சற்றே வளர்ந்ததும்
பூச்செடிகள் ...
எத்தனை செய்தும்
இன்றுவரை வரவில்லை மீண்டும்..

தேர்வுக்குப் பின்பான
ஆணிதுளைத்த பதிவேட்டில்
ஒட்டியிருக்கின்றன இன்னும்
கொஞ்சமாய் சிறகின் மஞ்சளும்..
ஒடிந்து போன அதன் காலும்..

காணாமல் போனவை- 3

பள்ளி விடுதிக்கு
அடிக்கடி வந்தன
ஒரே உறையிலிடப்பட்ட
சில கடிதங்கள்
எவரது எதுவென்றெல்லாம்
கேள்வி யெழுப்பாமல்..

தாத்தாவின் காகிதத்தில்
நாயின் கால்
வலப்புறம் தனித்தும்
புறாவினது இடப்புறம்
சுழன்று மிருக்கும்.

நுணுக்கி எழுதும்
அம்மாவின் கடிதம்
அவ்வப்போது ஏந்திவரும்
எண்ணெய் அல்லது
மஞ்சள் கறையை..

அப்பா எழுதுவது
அலுவலகத்து மையில்
அவசரமாய்...

ஓரங்களில் கோடிட்டு
ஒழுங்காய் எழுதுவது
தங்கை..

அனைவரின் தகவலையும்
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக்
கூர்ந்து நோக்குகையில்
தெரிகின்றன
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem15062009.asp

காணாமல் போனவை -2


தேடும் அவகாசமற்று
அலுவலக அவசரங்களில்
தொலைத்திருந்த
உவமைகளுள் ஒன்றை,
சமையல்காரர் விடுப்பெடுத்த நாளில்
கண்டுகொண்டேன் மீண்டும்..
குட்டிப்பிறைகள்
குழம்பில் மிதந்தன
தோலுரிக்கப்பட்டு
.

26 May, 2009

காணாமல் போனவை -1


பால்யத்துடன் சேர்ந்து
காணாமல் போயிருந்தது
வயிற்றில் முளைத்து
வாய்வழி வருமென
அஞ்சப்பட்ட திராட்சை விதை..
வருடங்கள் கழிந்தபின்
எதிர்பாராத் தருணத்தில்
மனப் பொந்தினின்று
முளைத்தெழுகிறது
மெல்லிய கவிதையாய்.