10 November, 2021

சொல் வண்ணம்


 


அவ்வப்போது கவிதைகளில்
அமர்ந்து கொள்வதுண்டு
பிடித்தவர்களுக்குப் பிடித்த
சொல்லும் நிறமும்.

அம்மாவின் சொல்லுக்கு
அரக்கு நிறம்
அணைத்துக் கொள்கிறேன்.

அப்பாவின் சொல் என்றும்
வெண்மைதான்
வியந்து போகிறேன்.

தங்கையின் சொல்லுக்கு
வாடாமல்லி நிறம்
தடவிப் பார்க்கிறேன்.

கணவருக்குப் பிடித்த
கருநீலச் சொல்லுடன்
காதலுறுகிறேன்.

மகளின் சொல்லுக்கு
இளஞ்சிவப்பு நெற்றியுண்டு
முத்தமிடுகிறேன்.

மிகப்பிடித்த கவிஞரின்
மிக ரசித்த சொல்லை நிறத்தை
வணங்கி நிற்கிறேன்.

கச்சிதமாய்ப் பொருந்தியும்
கவனத்துடன் தவிர்க்கிறேன்
பிடிக்காத ஒருவர்
புழங்கும் சொல்லை.

சொல்லாத அச்சொல்
சுமந்து நிற்பது என்
வன்மத்தின் வண்ணமன்றோ
சுருங்கிப் போகிறேன்.

No comments:

Post a Comment