08 November, 2021

புத்தனின் பாடல்


 

மழைக்காலத்து
புத்தனின் மேல்
படர்ந்திருக்கும் பாசி.

கழுத்து மடிப்பின்
பச்சையத்தில் பொலிவது
அங்கில்லாத மூங்கிலின் கணு.

கவிழ்ந்த இலை போல்
இடை வீங்கி
முனை கூர்ந்த இமைகள்.

குழை களைந்த
நீள் செவியின் துளைகளுக்குள்
நுழைந்து நீங்கும் காற்றுக்கு
புல்லாங்குழலின் ஞாபகம்.

எனக்கும் கேட்கிறது
வாய் திறவாது
முணுமுணுவென
புத்தன் இசைக்கும்
பாடல்.

No comments:

Post a Comment