29 October, 2021

ஆவணங்கள் முக்கியம் அமைச்சரே

 கடற்காற்று சிகை கலைக்க

வாழ்வதை இன்று ரசித்தேன்.
எத்தனை முறை 
இதயம் துடித்ததென
எழுதி வைத்தாயா?

இளஞ்சிவப்பிலும்
கருநீலத்திலும்
மலர்கள் செழிக்கும்
தோட்டம் உண்டு என்னிடம்.
கிளை நுனிகளைக்
காலக் கெடுவுக்குள்
கத்தரித்தாயா,
ஆவணம் எங்கே?

ஒரு வானவில்லின்
வர்ணப்பிரிகையைக்
கண்டு மெய் மறந்தேன்..
காண்புறு ஒளியின்
அலைநீளம் அறிவாயா?

சாகக் கிடந்தவனை
மடியில் கிடத்தி
சில மிடறுகள் புகட்டினேன்.
அவன் மாண்டு போகும்
முன்னரும் பின்னரும்
உனது குவளையின் 
நீர் இருப்பை
அளந்து விட்டாய் அல்லவா?

எனக்கு மூச்சு முட்டுகிறது.
அட்டவணையில் குறித்துவை,
ஆய்வுக்கு ஆகும்.

No comments:

Post a Comment