29 October, 2021

காலையில் இங்கொரு புறா நின்றிருந்தது

 என்ன பிடித்துவிடக்கூடும்

இங்கு உனக்கு?
நின்‌ மூதாதையர் கண்டிருந்த 
மாடத்து சிறுமணிச் சுடரின்
குறுக்குவெட்டுத் தோற்றத்தை
விழிகளில் சுமந்தலையும் உனக்கு?

என்ன பிடித்துவிடக் கூடும்
இங்கு எனக்கு?
அதி ஆதி நினைவென
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்த குளக்கரையை
மனதினில் சுமந்தலையும் எனக்கு?

என்ன பிடித்துவிடக்கூடும்
இங்கு உனக்கும் எனக்கும்?
ஆறாம் தளத்து மொட்டைமாடியில்
காலை நடை பயிலுகையில்
வானுக்கருகில் இருக்கிறோம்
என்பதைத் தவிர!

இன்றோ
அலையல்ல மலையல்ல,
அடுக்ககத்து முதுகிலேறி
பெருநகரத்து 
வெண்சூரியன் வருகையில்..

உன் கழுத்தின் 
மினுமினுப்பை 
கைப்பேசியின்
சட்டத்தினுள்
அடைக்கவே எத்தனித்தேன்..

பச்சை ஒளிரும் பொன்வண்டை
தீப்பெட்டிக்குள் அடைத்த 
பால்ய நண்பனை
நினைந்தபடி..

போயும் போயும் 
எனை அஞ்சியா
பறந்து மறைந்தாய்??

No comments:

Post a Comment