
கவலை யேதுமற்று
அடர்மஞ்சள் சிறகசைத்து
அடிக்கடி வருவதுபோல்
அன்றும் வந்தது அது..
திறந்திருந்தது தமக்கையின்
தாவரவியலேடு
பசையுலர்த்தும் பொருட்டு..
பருத்த புத்தகங்களில்
பதப்படுத்தப்பட்டு
பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
சங்குப்பூவிதழோரம்
அமர்ந்திருந்து
கிளம்ப எத்தனிக்கையில்
சில நொடிகள் படபடத்தது
இயல்புக்கு மாறாய்...
சிலநாட்களுக்குச்
சீனிக் கரைசல்..
தொடர்ந்த நாட்களில்
தேன் கிண்ணம் ..
சற்றே வளர்ந்ததும்
பூச்செடிகள் ...
எத்தனை செய்தும்
இன்றுவரை வரவில்லை மீண்டும்..
தேர்வுக்குப் பின்பான
ஆணிதுளைத்த பதிவேட்டில்
ஒட்டியிருக்கின்றன இன்னும்
கொஞ்சமாய் சிறகின் மஞ்சளும்..
ஒடிந்து போன அதன் காலும்..