
விழிகள் விரித்து
விற்புருவம் உயர்த்தி
மாயக் கதை கேட்ட
மழலையின் நெற்றியை
இருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து
செவ்வகத் துண்டுகளாய்ச்
செவ்வானைப் பிரித்திருந்த
சன்னலின் குறுக்குக் கம்பிகளில்...
அனுமதி கோராது
அறையுள் பிரவேசித்த
அறிமுகமற்ற மரமொன்றின்
அழகிய சருகின் நுனி
எழுதிப் போனது
இக்கவிதையை.