20 January, 2021

விடுதலை


 காரினுள் தவறி நுழைந்த வண்ணத்துப்பூச்சி 

எங்ஙனம் கணக்கிடும் 

பறத்தலின் விசையை?


காரை மிஞ்சினால் முன்புறமும் 

வேகம் குறைத்தால் பின்புறமும் 

கண்ணாடி முட்டி வீழுமோ? 


காரின் சரிவேகம் வேண்டுமோ  

வெறுமனே மிதந்தால் போதுமோ?

வளைவுகளில் என் செய, அறியுமோ?


வெய்யிலில் திரிந்ததற்குக் 

குளிர்பதனம் ஆகுமோ?

தோல் மணக்கும் எனது கைப்பை 

தோன்றுமோ பெரும்பழுப்புப் பூவென?


மூச்சு முட்ட முட்ட 

திறந்துவிட்டேன் சன்னலை.


வெளிர்நீலப் பூவாய் வான் மலர 

வெளியேகிப் படபடத்தது மென்சிறகு

பெரு வணிகர் வீட்டின் 

பிறந்தநாள் விருந்தினின்று 

விரைந்து வெளியேறும் 

பணிப்பெண்ணின் கண்கள் என. 

No comments:

Post a Comment