
முகில்கள் திரண்டிருந்ததோர்முற்பகலில்
பீலிகளற்ற பெண்மயிலொன்று
பூங்காவில் தனித்தலைகையில்
முதன்முதலாய்க் காணலுற்றோம்
நான் அவனையும்,
அவன் மயிலையும்..
விழிகள் சுருக்கி
இதழ்கள் பிதுக்கி
பாடநூல்கள் காட்டியது
இதுவல்ல என்பதாய்
ஓயாமல் புலம்பினான்..
ஏதோ நினைத்தவனாய்
புத்தகப்பையினின்று
இறகொன்றையெடுத்து
அதனருகில் இருத்திப்பின்
தந்தையின் விரல்பிடித்து நடந்தான்..
உருவமற்றதோர் இறகு
முளைக்கத் தொடங்கியது
என் எழுதுகோலின் முதுகில்.