
நிலவொளியின் வெண் மடியில்
நீண்டதொரு கவிப்பொழுதில்
நேசத்தின் நிறம் நீலமென்றாய்..
நிர்மல வான் ஆனாய்...
பிரிவுரைக்கும் தருணத்தில்
பிணங்கிய கருமுகிலென
பெருவானைப் போர்த்துகிறாய்
பித்தாக்கும் மௌனங் கொண்டு..
இரக்கமின்றி பொழிந்தும் தீர்க்கிறாய்
நிறங்களற்ற கொடுந்தனிமையை..
செயலற்று வான் வெறிக்கிறேன்
சினந்தொழுகிய கடுமழையில்
சிறகு கனத்து நிற்கும்
செவ்விழிப் பறவையென.