
அந்த
மிகுமழை இரவின்
மின்தடைப் பொழுதில்..
இருள் கண்டு மருண்டவளில்லை நான்..
இருள் கண்டு மருண்டவளில்லை நான்..
கண்பார்த்துக் கதைத்திருக்க
கதைகளோ கதைப்போரோ
உடனிருக்கவில்லை.
குழந்தைமை தொலைத்தவர்க்கு
வீட்டுப்பாடம் செய்யவோ
விரல்களின் நிழல் கொண்டு
விளையாடி இருக்கவோ
விதிகளின்படி அனுமதியில்லை..
பாராமுகம் தாளாமல்
பகலிலேயே வெளியேறியிருந்தாள்
வழக்கமாயென் கவிதைகட்குப்
பாடுபொருள் தருவிக்கும் சிறுமி..
உறைந்திருந்த நினைவுகளைச்
சூடேற்றி விழுங்க
மௌனத்தின் வெம்மையே
போதுமாயிருந்தது..
எனினும் காரணமின்றி
எரிந்தபடி யிருந்தது
மெழுகுவர்த்தி..
நகர்த்துகையில் விரல் படிந்த
இரு துளி மெழுகை
இலகுவாய்ப் பிரித்தெடுத்தேன்
வெளிறிய பூவிதழென..
ஏனோ அது ஒத்திருந்தது
சுடர் தீண்டித் துடித்தடங்கிய
ஈசலின் மென்சிறகை.
காரணமின்றி நிகழ்ந்திருந்தது
அதன் மரணம்
உன் நிராகரிப்புகள் போலவே.
நன்றி அகநாழிகை