22 March, 2009

ஓர் ஓவியம், ஒரு கவிதை


சதுரத்தின் மேல் முக்கோணம்
சட்டென வீடாய் மாறிட..
வட்டங்களும் சில கோடுகளும்
வடிவம் பெற்றன மக்களாய்..

நாலரை வயது மழலைக்கிறுக்கலில்
மேகங்களும் சில கூடின..

மழலையின் ஓவிய முகில்கள் திறந்து
மழைவரும் நொடியில் கவிசெய
மனமேங்கிக் காத்திருந்தேன்...

நேற்றைய மழையில் ஆடியபோது
கதவடைத்துக் கத்திய தன் தாயின்
நினைவுடன் நின்றுபோனது ஓவியம்.
மழலைவானம் மழை காணவில்லை..

கனவுக் கருவறைக்குள்
கார்முகில்துளி கால்பதிக்கையில்
கவிதைக் குழந்தைக்காய்
களிப்புடனே காத்திருந்தும்
கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
கசங்கிப்போயின என் காகிதங்கள்...

பெரியவர்களின் முகில்களும்
பெய்யாமல் கலைந்தன.
..
நன்றி உயிர்மை

5 comments:

  1. (கனவுக் கருவறைக்குள்
    கார்முகில்துளி கால்பதிக்கையில்
    கவிதைக் குழந்தைக்காய்
    களிப்புடனே காத்திருந்தும்
    கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
    கசங்கிப்போயின என் காகிதங்கள்...)

    ஐயோ..! என்று மனசுக்குள் உருவாகும் பதட்டம்.. அதுத்த வரிகளில் வருது..

    (பெரியவர்களின் முகில்களும்
    பெய்யாமல் கலைந்தன...)

    மழலையின் மௌனமும்..உங்களின் மௌனமும்.. அந்த வீட்டுக்குள்.. ஒதுங்கி நின்று விட்டது..
    ஆனால் மழை பெய்யப் போவதில்லை..என்ற என்னமோ..கனமாய்.. தேங்கிவிடுகிறது..மனசுக்குள்..

    [ சமீபத்தில்..நல்ல கவிதை தொகுப்பொன்றை வாசிக்க ஆரம்பித்துவிட்ட அனுபவத்தை உங்கள் கவிதைகள் எனக்கு தந்துக் கொண்டிருக்கின்றன கௌரி.. இந்த உற்சாகத்தை.. நீங்களும் இழந்துவிடாதீர்கள்..எனக்கும் தரத் தவறிவிடாதீர்கள்.. ]

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இளங்கோ

    ReplyDelete
  3. //கனவுக் கருவறைக்குள்
    கார்முகில்துளி கால்பதிக்கையில்
    கவிதைக் குழந்தைக்காய்
    களிப்புடனே காத்திருந்தும்
    கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
    கசங்கிப்போயின என் காகிதங்கள்...//

    கவிதை தூறல் மழையாய் பொழிகிறது....

    உங்கள் வலைப்பூ முழுதும் வலம் வந்து கவித்
    தூறலில் நனைந்து மகிழ்ந்தேன்
    இன்னும் நிறைய எழுதுங்கள் மீண்டும்
    நனையக் காத்திருக்கிறேன்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மிக்க நன்றி புதியவன்

    ReplyDelete
  5. I read this n-th time ...u rock... :-)

    ReplyDelete