15 August, 2021
செம்மஞ்சள் இடைவேளைகள்
ஆதிச்சுடர்
இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்
செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை.
13 August, 2021
இதயம்
உறுப்பு மாற்று
வாடாமல்லியும் தொட்டாற்சிணுங்கியும்
வாடாமல்லிகள் பூக்கின்றன
எவரின் பார்வையும்
தப்ப இயலாத
அடர்நிறத்தில்..
சற்றே கனமாய்..
தொட்டாற்சிணுங்கிகளும் பூக்கின்றன
கவனம் கோராத
அதே நிறத்தில்..
அத்தனை இலகுவாய்..
ஒரு வாடாமல்லியை
உணர்ந்து கொள்ள
கவனம் முழுவதையும்
கட்டை விரலில்
குவித்தல் வேண்டும்.
தொட்டாற்சிணுங்கிப்
பூவுக்குப் போதும்
ஒரு பூனைக்கான
மென்வருடல்.
முன்னதுடன் எனக்குத்
தோன்றும் ரசனை.
பின்னதுடனோ ஒரு
பெரும் சினேகம்.
பூக்காது போவதில்லை தொட்டாற்சிணுங்கிகள்.
சுடர்
வாதம் கண்ட
பாட்டியை இருத்தி
தலை சீவிப் பூமுடிக்கும்பேத்திகள் குழு.
கார்காலத்து மரத்தடியில்
சருகை நிமிர்த்திச் சுடராக்கும்
சிற்றெறும்புக் கூட்டம்.
வண்ணதாசம்
கான்கிரீட் காட்டினூடே
20 January, 2021
விடுதலை
காரினுள் தவறி நுழைந்த வண்ணத்துப்பூச்சி
எங்ஙனம் கணக்கிடும்
பறத்தலின் விசையை?
காரை மிஞ்சினால் முன்புறமும்
வேகம் குறைத்தால் பின்புறமும்
கண்ணாடி முட்டி வீழுமோ?
காரின் சரிவேகம் வேண்டுமோ
வெறுமனே மிதந்தால் போதுமோ?
வளைவுகளில் என் செய, அறியுமோ?
வெய்யிலில் திரிந்ததற்குக்
குளிர்பதனம் ஆகுமோ?
தோல் மணக்கும் எனது கைப்பை
தோன்றுமோ பெரும்பழுப்புப் பூவென?
மூச்சு முட்ட முட்ட
திறந்துவிட்டேன் சன்னலை.
வெளிர்நீலப் பூவாய் வான் மலர
வெளியேகிப் படபடத்தது மென்சிறகு
பெரு வணிகர் வீட்டின்
பிறந்தநாள் விருந்தினின்று
விரைந்து வெளியேறும்
பணிப்பெண்ணின் கண்கள் என.
நான் போதுமானவள்
ஒருபோதும் முடிவதாயில்லை
போதாமைகளின் பட்டியல்...
சான்றுக்கு மூன்று சொல்வேன்
சான்றோர் கேட்க.
பிம்பம் எனதைத் தீட்டும்
பெருஞ்சித்திரக் காரருக்கு
போதவில்லை எனது நிறம்..
மழை நனைத்த மண்ணின் நிறமெனக்கு
மண்துளைத்த வேரின் நிறமெனக்கு.
இதமான தேநீரின் நிறமெனக்கு
இனிதான தெளிதேனின் நிறமெனக்கு
இதயத்தின் தசைநார்களின் நிறமெனக்கு.
விசை பெருகப் புயலின் மிசை
விண்ணளக்கும் கழுகின் நிறமெனக்கு.
நான் போதுமானவள்.
பதறிப் பதறி எனைப்
பட்டை தீட்டும் கொல்லருக்கு
போதவில்லை எனது மினுக்கம்.
உதறிச் சென்றமிழ்வேன்
ஓசையற்ற நதியடியில்.
கிரீடத்தில் ஒளிரும் வைரமல்ல;
கன்னத்தில் குளிரும் கூழாங்கல் நான்.
நான் போதுமானவள்.
எரிவாயு அடுப்பிடம்
நீலத்தழல் நாக்கள் வாங்கி
நாளும் வெறுப்பு செயும்
நளராஜ சீடருக்கு
போதவில்லை எனது உணவின் ருசி.
சின்னஞ்சிறு சுடரொளியில்
கவிதை சமைப்பவள் நான்.
நான் போதுமானவள்.
அவர் அளவையில் நான்
போதாமைகளின் பேரணி.
எனதளவில் நான்
எது குறையினும் பூரணி.
ஆழியின் மகரந்தம்
பூக்களை மட்டுமே
புகைப்படம் பிடிப்பவன்
கடல் பார்த்துத் திரும்புகிறான்
ஒற்றை அலையின் படத்துடன்.
மலர்ந்த நாகலிங்கத்தின்
மகரந்த முக்காடு போல்
ஒயிலாய் வளையும் ஒற்றை அலை.
கடலினுள் இறங்கும் கதிரவனின்
செம்மஞ்சள் பூசிச் சிதறும்
மகரந்தத் துகள்களென
நீர்த்துளிகள்.
ஆழியை மடித்து மடித்து
அல்லிவட்ட இதழ்கள் செய்யும்
ஓரிகாமி அறிந்த
சிறுமி இக்கவிதை.
நன்றி: யாவரும்.காம்
28 July, 2020
இணை கோடுகள்
அரைநொடி மின்னலுக்கு இணையென
நகராது நகர்ந்தெழுதும்
நத்தை தனது மினுங்கும் கோட்டை.
நேர்க்கோட்டில் நீந்தும்
திமிங்கிலத்தின் பெருமூச்சை
வெகுநீட்டி விரையும்
விமானத்தின் வெண்புகை.
ஈறறியாப் பேரண்டத்தில்
எவர் வகுக்கக் கூடும்
இலக்கங்கள்...
இலக்கணங்கள்..
இணைகோட்டுச் சூத்திரங்கள்?
எல்லாம் கிடக்கட்டும்..
இல்லாதிருக்கும்
இருப்புப் பாதையில் பார்..
சின்னஞ்சிறு மஞ்சள் பொதிகளில்
கவிதைகள் சுமந்து வரும்
இரயில் பூச்சி.
19 September, 2019
வேனிலின் சுடர்கள்
கங்குச்சட்டியில் வாடும்
கதிர் சோளக் கூம்பினின்று
கடற்கரை வெளியேகும்
தகிக்கும் தங்கச் சுடர்கள்.
கொன்றை மஞ்சரிக் கூம்பு நீங்கி
கொதிகானலில் நெளிந்தாடித்
தரைநோக்கிப் பயணிக்கும்
தணிந்த தங்கச் சுடர்கள்.
இரவோடும் பகலோடும்
கடலோடும் கானலினூடும்
தகித்திருக்கையில் தணிந்ததையும்
தணிந்திருக்கையில் தகிப்பதையும்
சடசடப்பதையும் சப்தமற்றதையும்
ஒன்றே போலத் தழுவித் திரிகிறான்
காற்றெனும் மாய முதுகிழவன்.
09 September, 2019
23 May, 2019
19 May, 2019
08 February, 2019
மாவடுக்காலம்
புறங்கையில் இமை உரசிப்
புன்னகைக்கும் மாயாவைப் போல்
மாடிச்சுவர் உரசி நிற்கிறதிந்த
பசுமஞ்சள் மாமஞ்சரி.
தாழ்ந்த கிளையொன்றின் மாவடுவைத்
தாவிப் பறிக்கும் மாயா,
உள்ளங்கைக்குள் உய்விக்கிறாள்
ஒரு நெடுங்கோடையின் காதையை.
ஆடிக்களித்த பெருவெளி
அந்நியமாகும் தினத்தை..
விளைநிலம் விட்டொழிந்து
வேறெங்கோ வீழ்தலை..
உப்பு நீரில் ஊறியூறி
உலர்ந்து கிடத்தலை..
சுவை மொட்டுகள் முன்மொழியும் மதிப்பீடுகளை..
ஒப்பனைச் சொற்கள் பூண்ட
ஒப்பீட்டுச் சந்தைகள்
ஒவ்வாது புழுங்குமொரு பொழுதை என
மயிற்பீலிகள் பிரசவிக்கும்
மாயாவின் பேழைக்குள்
கனவிலும் மாவடு காண்பதற்கில்லை
கனலும் பாலைப் பொழுதுகளை.
பருவங்களை உறைவிக்கும்
திறனற்றதொரு வேனிற் கனவில்
மாவடு ஆகிறாள் மாயா,
மாயாவாகிறேன் நான்.
நீலம்
நீச்சல் குளத்தின் தரைக்கு
வேறெந்நிறமும் ஒவ்வாதெனினும்
இணக்கமில்லை
இந்நீலத்துடன்..
குடுவைப்பூ...
குவளை மீன்...
குயவனின் வனைதலுக்கொப்ப
குறுகிக் கிளைக்கும்
உப்பரிகைச் செடி...
போலவே திணறுமிந்த நீலம்.
மகவீன்று ஒற்றை அறைக்குள்
மனம்பிறழ்ந்தவளின்
கவிச்சொற்களென
நில்லாது நெளியும்
நீச்சல் குளத்தின் தரையிற் புதைந்த
சின்னஞ்சிறு சதுரங்கள்..
மென்மெல்லிய இருதயங்கொண்ட
கவியொருவனின்
மௌனம் நீலம்..
நீலம் மௌனம்
நீலம் ஆழம்
நீலம் அண்டம்..
ஒடுங்கிய வெளியெதற்கும்
உகந்ததல்ல நீலம்.
நீலம் பறவை
நீலம் பரவை..
நீலம் வகுப்பதற்கில்லை
நீலம் வனைவதற்கில்லை
நீலப் பூச்செதற்கும்
நீலத்தின் அழகில்லை.


















