08 February, 2019

மாவடுக்காலம்

பட்டுப்பூச்சி போல் பாவித்து 
புறங்கையில் இமை உரசிப்
புன்னகைக்கும் மாயாவைப் போல்
மாடிச்சுவர் உரசி நிற்கிறதிந்த
பசுமஞ்சள் மாமஞ்சரி.

தாழ்ந்த கிளையொன்றின் மாவடுவைத்
தாவிப் பறிக்கும் மாயா,
உள்ளங்கைக்குள்  உய்விக்கிறாள்
ஒரு நெடுங்கோடையின்  காதையை.

ஆடிக்களித்த பெருவெளி
அந்நியமாகும் தினத்தை..
விளைநிலம் விட்டொழிந்து
வேறெங்கோ வீழ்தலை..
உப்பு நீரில் ஊறியூறி
உலர்ந்து கிடத்தலை..
சுவை மொட்டுகள் முன்மொழியும் மதிப்பீடுகளை..
ஒப்பனைச் சொற்கள் பூண்ட
ஒப்பீட்டுச் சந்தைகள்
ஒவ்வாது புழுங்குமொரு பொழுதை என
மயிற்பீலிகள் பிரசவிக்கும்
மாயாவின் பேழைக்குள்
கனவிலும் மாவடு காண்பதற்கில்லை
கனலும் பாலைப் பொழுதுகளை.

பருவங்களை உறைவிக்கும்
திறனற்றதொரு வேனிற் கனவில்
மாவடு ஆகிறாள் மாயா,
மாயாவாகிறேன் நான்.

No comments:

Post a Comment