ஒருபோதும் முடிவதாயில்லை
போதாமைகளின் பட்டியல்...
சான்றுக்கு மூன்று சொல்வேன்
சான்றோர் கேட்க.
பிம்பம் எனதைத் தீட்டும்
பெருஞ்சித்திரக் காரருக்கு
போதவில்லை எனது நிறம்..
மழை நனைத்த மண்ணின் நிறமெனக்கு
மண்துளைத்த வேரின் நிறமெனக்கு.
இதமான தேநீரின் நிறமெனக்கு
இனிதான தெளிதேனின் நிறமெனக்கு
இதயத்தின் தசைநார்களின் நிறமெனக்கு.
விசை பெருகப் புயலின் மிசை
விண்ணளக்கும் கழுகின் நிறமெனக்கு.
நான் போதுமானவள்.
பதறிப் பதறி எனைப்
பட்டை தீட்டும் கொல்லருக்கு
போதவில்லை எனது மினுக்கம்.
உதறிச் சென்றமிழ்வேன்
ஓசையற்ற நதியடியில்.
கிரீடத்தில் ஒளிரும் வைரமல்ல;
கன்னத்தில் குளிரும் கூழாங்கல் நான்.
நான் போதுமானவள்.
எரிவாயு அடுப்பிடம்
நீலத்தழல் நாக்கள் வாங்கி
நாளும் வெறுப்பு செயும்
நளராஜ சீடருக்கு
போதவில்லை எனது உணவின் ருசி.
சின்னஞ்சிறு சுடரொளியில்
கவிதை சமைப்பவள் நான்.
நான் போதுமானவள்.
அவர் அளவையில் நான்
போதாமைகளின் பேரணி.
எனதளவில் நான்
எது குறையினும் பூரணி.

No comments:
Post a Comment