15 November, 2021

ஓங்கில்களுடன் துள்ளுதல்


 

மௌனத்தை நேசிப்பவள்
விரும்பித் தேர்கிறாள்
பலரும் சலிப்பு கொள்ளும்
வேலைகளை.
அவற்றைச் செய்கையில்
திறந்து கொள்கிறாள்
எங்கெங்கோ அழைத்துச் செல்லும்
சுரங்கங்களை.
பூண்டு உரிக்கும் போது
பிறை அலையும்
கடற் பரப்பில்
ஓங்கில்களுடன் துள்ளுகிறாள்.
வாழைப்பூக்களின்
நடுப்பகுதி கிள்ளி
மடல் மேல் இடுகையில்
அரக்குப் படகொன்றில்
நாரைகளுடன்
பயணிக்கிறாள்.
இஸ்திரி முடித்து
துணியை அடுக்குகையில்
படகை விட்டிறங்கி
பெருநதியை மடிக்கிறாள்.
குளிராடை பின்னுகையில்
மழை வனத்தின்
வேர்ச் சடைகளில்
கன்னம் வைத்துக் கிடக்கிறாள்.
பிறகு அவள் சொல்கிறாள்
மௌனம் என்பது பேசாதிருப்பதல்ல;
எவருக்கும் கேட்காமல்
பேசிக் கொண்டே இருப்பது.

No comments:

Post a Comment