28 March, 2014

இடைநிகழ் வெண்ணிலாக்கள்



இம்சிக்கும் நிச்சலனம்..
இளகி விரியும் வட்டங்கள்...
இரண்டுக்கும் இடையில்தான்
நீர்ப்பரப்பை நெகிழ்த்தியது
மீன்குஞ்சின்  மென்முத்தம்.

அசைவறியா வளிப்பூக்களை
அரும்பவிழ்த்துச் சென்றது
சிலிர்த்து வெளியேறிய
சிசுவின்  முதல் விசும்பல்.

அறிந்திராத அன்றைக்கும்
முடிந்திராத இன்றைக்கும்
இடையில் விரிகிறது
வெடித்துதித்த  வானம்.

நிறைதலுக்கும் வடிதலுக்கும்
இடையில் ஒரு துளை..
நிறைதலுக்கும் வழிதலுக்கும்
இடையில் ஒரு துளி..

வெயில் குடித்த விடர்நிலம்
குளிர்ந்து குழையும் முன்பு
பொழிந்து போயிருந்தது
பொதியெனத்  திரண்ட பெருமுகில்..

உணர்ந்ததை உணர்த்தும்
உத்திகள் மழுங்கிய
சொல் வறண்ட வெங்காட்டிடை
சொற்பநேரம் வந்து போயேன்
வெகுநாளாய் வர மறுக்குமென்
வெண்ணிலாக் கவிதையே......

4 comments:

  1. சொல் வறண்ட வெங்காட்டிடை
    சொற்பநேரம் வந்து போயேன்
    வெகுநாளாய் வர மறுக்குமென்
    வெண்ணிலாக் கவிதையே......


    :)

    ReplyDelete
  2. அருமை.. அருமை..

    ReplyDelete