15 April, 2011

மரணத்தைக் கூறிடுகையில்..


மரணித்த வண்ணத்துப்பூச்சியை

இழுத்தூரும் எறும்புகள் கண்டு

இறுகக் கண்கள் அடைக்கிறேன்..


கனமழை ஓயும் விடியல்களில்

நாசி மூடி நடக்கிறேன்..

வீழ்ந்த மரத்தின் வேர்சுரக்கும்

மண் மற்றும் மரணவாசம் தவிர்க்க..


கருஞ்சிறகெரிய ஒன்று கதறி வீழ்வதும்

கண்டிருந்தவை கரைந்தலைவதும்

கேட்கச் சகிப்பதில்லை..

காக்கைகள் சுற்றும் மின்கம்பங்களைக்

காது பொத்திக் கடக்கிறேன்...


எதன் மரணமும் என்னை

இளக்க முடியாதென

இத்தனை கவனமாய்ப் பாவித்துப் பழகியும்

இறந்து பிறந்த பூவொன்றின்

முதிராத முகவாய் தடவித் தொடங்கி

மெல்லக் கீழ்நோக்கிக் கீறுகையில்

மதகுகள் உடைக்கும் மனம்

மருகியபடி உதிர்க்கிறது

மரணங்குறித்த கவிதையொன்றை...

இன்மையை ஈன்றவளின்

இறுகிக் கசியும் கருப்பையென

10 comments:

  1. மென்மனம் வாய்திருக்கிறது தங்காய் உனக்கு. நல்ல கவிதை.

    ReplyDelete
  2. ம்ம்ம் :((

    ReplyDelete
  3. கௌரி,

    :(
    அருமையான வெளிப்பாடு...

    ReplyDelete
  4. கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!!

    ReplyDelete
  5. எப்படி தப்பித்தாய் மகளே இதுவரை கண்களில் படாமல்

    ReplyDelete
  6. லாவண்யா அக்கா, புனிதா, சுகிர்தா அக்கா , இளங்கோ, நந்தலாலா, எட்வின் ஐயா... அனைவருக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  7. ''..எப்படி தப்பித்தாய் மகளே இதுவரை கண்களில் படாமல்..''
    இரா.எட்வின் கூறுவது போல் நானும் கூறுகிறேன். நலவாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. எதன் மரணமும் என்னை


    இளக்க முடியாதென


    இத்தனை கவனமாய்ப் பாவித்துப் பழகியும்


    இறந்து பிறந்த பூவொன்றின்


    முதிராத முகவாய் தடவித் தொடங்கி


    மெல்லக் கீழ்நோக்கிக் கீறுகையில்


    மதகுகள் உடைக்கும் மனம்


    மருகியபடி உதிர்க்கிறது


    மரணங்குறித்த கவிதையொன்றை...

    இன்மையை ஈன்றவளின்


    இறுகிக் கசியும் கருப்பையென


    மனம் சிலிர்த்து அடங்கியது ..உங்கள் கவிதையை படித்து கௌரி

    ReplyDelete