30 April, 2009

எதுகை தேடுங்கள்..


கருவுற்றிருக்கும் மயிலிறகு..

கசங்கியதோர் காகிதக்கப்பல்..

கடற்கரையில் கண்டெடுத்த

நட்சத்திர மீன்கூடு..

அழிப்பானின் மூலப்பொருளாய்

அறியப்படும் பென்சில்சீவல்..

மணலில் புரண்டெழுந்து

பேய்முடியீனும் காந்தத்துண்டு..

செந்நிறக் கிளிஞ்சலென

குல்மொஹர் இதழொன்று..

காணும் பொங்கலன்று

தாத்தா தந்த பத்துரூபாய்..

விழுகையில் உடைந்ததும்

உடையாது விழுந்ததுமாய்

முன்வரிசைப் பற்களிரண்டு..

மேசைக்கரண்டியினின்று

இடம்பெயராத எலுமிச்சைக்கு

பள்ளியில் தந்த பதக்கமொன்று..


யாவுமிருக்கும் பென்சில் பெட்டியைப்

பற்கள் கொண்டு நான்

பாங்காய்த் திறப்பதைப்

பரவசமாய்ச் சிலாகித்து

எழுதித் தீர்க்கும் நீங்கள்..

விலையுயர்ந்த மிட்டாயின்

வண்ணம் மங்கிய காகிதத்தை

மறவாமல் எழுதுங்கள்- அத்துடன்..


தனித்தென்னைத்

தின்னச் செய்கையில்

தாயின் கால்கள் பின்நின்று

வேலைக்காரியின் பிள்ளை

விழிமுனையில் சிந்திய

ஏக்கப் பார்வைக்கும்

எதுகை தேடுங்கள்..


வளர்ந்துவிட்ட உங்களுக்கு

வார்த்தை கிடைக்காமலா

போய்விடும்??


http://youthful.vikatan.com/youth/gowripoem090509.asp